திம்புள்ளை, பத்தனை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் நேத்ரா பிளேஸ் பகுதிக்கு மேல் அமைந்துள்ள நீர்ப்போசன வனப் பிரதேசத்திற்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக அப்பகுதியில் 10 ஏக்கர் வரையுள்ள வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த தீக்காரணமாக தொலைபேசி வயர்களுக்கும் மின் வயர்களுக்கும் மற்றும் குடிநீரக் குழாய்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

குறித்த பகுதியிலிருந்தே சாந்திபுரம், சமாதானபுரம், நேத்ரா பிளேஸ், கொட்டகலை, கொமர்ஷல் உள்ளிட்ட பகுதியில் வாழும் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீரினைப் பெற்றுக்கொள்கின்றன. இதனால் எதிர்காலத்தில் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேநேரம் குறித்த வனப்பகுதியில் எமது நாட்டுக்கு உரித்தான பறவையினங்கள், மான், மரை, பன்றி, முயல் உள்ளிட்ட பிராணிகளும் வாழ்ந்து வருகின்றன.

இந்த தீ காரணமாக இவைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

வறட்சியின் போது மக்கள் சிந்திக்காமல் செய்யும் விஷமத்தனமான செயல்கள் காரணமாக உயிரினங்களும் பொதுமக்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

நேற்று தீ வைக்கப்பட்ட போது இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளும் திம்புள்ள பத்தனை பொலிஸாரும் வந்து பார்வையிட்டதாகவும் தீயினைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கும் இதேவேளை, தீ வைப்பதை கட்டுப்படுத்துவதற்கு தீவைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலமே முழுமையாக இவ்வாறான செயல்களைக் கட்டுப்படுத்த முடியுமென பொதுமக்கள் சுட்டடிக்காட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *