இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர் கதையாய் நீண்டு வருகிறது. சமீபத்தில் அந்த பிராந்தியத்துக்கு வந்த அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், அமைதிக்கு அழைப்பு விடுத்த நிலையில் இரு தரப்பு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இஸ்ரேல் விமானங்கள், பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியில் உள்ள ராக்கெட் உற்பத்தி ஆலையை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் நேற்று முன்தினம் ராக்கெட் வீச்சு நடத்தியதைத் தொடர்ந்து, இந்த தாக்குதலை இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்தி இருக்கின்றன.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, “குறி வைத்து தாக்கப்பட்ட பாலஸ்தீன ராக்கெட் ஆலையில் ரசாயனங்கள் இருந்தன. காசாவைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் குழுவால் இந்த ஆலை நடத்தப்பட்டு வந்தது” என தெரிவித்தது.

நேற்று முன்தினம் பாலஸ்தீன போராளிகள் வீசிய ராக்கெட்டை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு வழிமறித்து அழித்ததும், அதில் பலி எதுவும் நிகழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *