கௌரவமாக நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கேகாலை அரநாயக்க “அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்” பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனல்ல, ரம்புக்கன பிரதேச செயலகங்களுக்குரிய 135 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நிலவிய குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் 3,847 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு, நெதர்லாந்து அரசாங்கத்தின் 18,650 மில்லியன் ரூபா கடனுதவியின் கீழ், இந்த நீர் விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் நிர்மாணப் பணிகள் 2018 இல் ஆரம்பிக்கப்பட்டது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் மேற்பார்வையின் கீழ் இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தினந்தோறும் 21,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், 07 சேவை நீர்த்தேக்கங்கள், 37 கிலோமீற்றர் பரிமாற்றக் குழாய் அமைப்பு, 120 கிலோமீற்றர் விநியோக குழாய் அமைப்பு ஆகியன இதன் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ், 52,300 குடும்பங்களை உள்ளடக்கிய சுமார் 169,000 மக்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவதோடு, அதன் கீழ் 25,200 புதிய நீர் இணைப்புகள் வழங்கப்படும். இதனைத்தவிர ஏற்கனவே உள்ள 27,100 நீர் இணைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன.

குடிநீர் திட்டத்தை மக்களுக்கு கையளித்த ஜனாதிபதி, நீர் கட்டமைப்பையும் திறந்து வைத்தார். பின்னர் குடிநீர் திட்ட வளாகத்தையும் பார்வையிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, – கடந்த காலங்களில் இலங்கை வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதலீட்டாளர்கள் எவரும் நாட்டுக்கு வரவில்லை.

நாட்டில் இருந்த முதலீட்டாளர்களும் நாட்டை விட்டு வெளியேறினர். அவ்வாறான சூழலில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் நான் நாட்டின் பொறுப்பை ஏற்று, சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளேன்.

ஏனென்றால் சிங்களவராக இருந்தாலும் சரி, தமிழராக இருந்தாலும் சரி, மக்கள் பிச்சைக்காரர்களாக வாழ விரும்புவதில்லை.

அவர்கள் பெருமையுடன் கண்ணியமாக வாழவே விரும்புகிறார்கள்.

சர்வதேச நாணய நிதியம் எமக்கு கடினமான நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால் எங்களுக்கு வேறு மாற்று வழிகள் இருக்கவில்லை.

இதற்கு முன்னரும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இதே போன்ற நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.

அங்கு ஒரு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான கொடுக்கல் வாங்கல்களில் இருந்து விலகியது.

ஆனால் நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று சரியான முகாமைத்துவத்துடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள், நமது நாட்டின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றியடையச் செய்து, பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர முடியும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியுள்ளோம்.

இன்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைக்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தி தேவையான ஆதரவை வழங்கியுள்ளனர்.

இந்த நாடு அடைந்துள்ள பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள வேண்டுமானால் அந்த ஆதரவு மிகவும் முக்கியமானது.

வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

”இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. நெதர்லாந்து அரசுக்கும், துருக்கி அரசுக்கும் எனது சிறப்பு நன்றிகள். மேலும், இப்பணிக்கு பங்களித்த நீர் வழங்கல் சபை உட்பட அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் இங்கு தங்கி இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க உழைத்தமைக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் எண் 6, அனைவருக்கும் சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் வழங்கும் இலக்கை அடைய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

இத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கு முயற்சி எடுத்த பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் இன்று இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை மகிழ்ச்சியே.

இன்று இத்திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றியடைய தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜனாதிபதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்று ஜனாதிபதி இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவித்துள்ளார். அவர் முன்னின்று நடத்தும் சரியான பொருளாதார வேலைத்திட்டத்தினால் கைவிடப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கக்கூடிய நிலையை நாடு எட்டியுள்ளது என்றே கூற வேண்டும்.” என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹசீம், ராஜிகா விக்ரமசிங்க, சுஜித் சஞ்சய பெரேரா, உதயகாந்த குணதிலக்க, கேகாலை மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான துருக்கிய தூதுவர் திருமதி டெமெட் சர்காஷூலி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். PMD News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *