நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்துக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டப் பிரிவில் பழமையான தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

பல வருடகாலமாக மூடிய நிலையில் காணப்பட்ட இத் தொழிற்சாலையானது, தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில்,  பின்னர் பார்க் தோட்ட முகாமைத்துவம் அதனை பொறுப்பேற்றது. அங்கு கழிவு தேயிலை அறைக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையிலேயே இன்று (18.03.2023) அதிகாலை தொழிற்சாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டு, தீ கொளுந்துவிட்டு எரிந்துள்ளது.

கந்தப்பளை பொலிஸார், தோட்ட மக்கள் மற்றும் நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை அணைக்க முற்பட்டபோதிலும், தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

தீ விபத்து தொடர்பான விசாரணைகளை கந்தப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தின்போது தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எவரும் இருக்கவில்லை. இழப்பு தொடர்பில் இன்னும் உரிய வகையில் மதிப்பீடு இடம்பெறவில்லை.

(அந்துவன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *