தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71.

நடிகர் சரத்பாபு தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரத்பாபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்த நிலையில், ஹைதராபாத் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்த நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை இன்று மோசமடைந்த நிலையில் அவர் உயிரிழந்ததார்.

சரத்பாபு திரைப் பயணம்: 1973ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

சரத்பாபு. ‘பட்டினப்பிரவேசம்’ படம் மூலமாக தமிழில் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர், பின்னாட்களில் தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார்.

1979ல் ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படம் அவருக்கு ரசிகர்களிடையே தனி அடையாளத்தை பெற்றுதந்தது.

தவிர, ‘சரபஞ்சரம்’, ‘தன்யா’ உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம்  ‘வசந்த முல்லை’ படத்தில் சரத்பாபு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரஜினியின் முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த சரத்பாபு, அதன்மூலம் ரஜினி ரசிகர்களின் அன்பையும் பெற்றவர்.

“திரையில் ரஜினியை சரத்பாபு அறைந்தாலும் ரஜினி ரசிகர்கள் கோபப்பட மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் மீது ரஜினி ரசிகர்களுக்கு பாசம் உண்டு” என்று பேட்டி ஒன்றில் ராதாரவி குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *