“இலங்கை அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் அழுத்தத்தை தொடர்ந்தும் உணர ஆரம்பித்துள்ளமையை நான் அறிவேன். இந்த அழுத்தம் தாங்க முடியாத சுமையாக இருக்கலாம். இது ஸ்திரமின்மை, தனிமை மற்றும் பயங்கரமானதாக இருக்கலாம். நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒவ்வொரு இலங்கையரும் அறிய வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். நீங்கள் சிறந்த விலைமதிப்பற்ற பொதுநலவாய குடும்பத்தின் ஒரு பகுதியாவீர்கள் என பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவித்தார்.

புவிசார் அரசியல் வரைபடவியலாளர்களுக்கான ஆரம்ப விரிவுரையை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புவிசார் அரசியல் வரைபடவியலாளர்களுக்கான விரிவுரை நேற்று (03) கொழும்பு சிட்டி சென்டரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில், ‘பெரும் நெருக்கடியான யுகத்தில் பொதுநலவாயத்தின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்றது.

இந்நிகழ்வில் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்ததாவது-

ஒரு குடும்பம் என்ற வகையில் எமக்கு ஒருவர் மீது ஒருவர் பொறுப்பு உள்ளது. நீங்கள் எதிர்கொண்டிருக்கும் சவாலைப் போல் நீங்கள் தனித்து விடவில்லை. ஒருவர் மீது ஒருவருக்கு கடமை, பகிர்ந்துகொள்வதற்கான அன்பு மற்றும் பயணம் என்பன உள்ளன.

பொதுநலவாய நாடுகள் மற்றும் இந்த பரந்த உலகம் முழுவதும் நான் பயணம் செய்கின்றேன். அதன் மூலமான நேரடி அனுபவம் மற்றும் சூழ்நிலைகள் வித்தியாசமானவை. எங்குப் பார்த்தாலும் அவை ஒன்றுக்கொன்று ஒத்த சவால்களைக் கொண்டவை. ஒரு நாட்டில் அழுத்தத்தின் கீழ் வாழ்வதாக நீங்கள் உணரலாம். உண்மை என்னவென்றால் நாம் அனைவரும் அழுத்தத்தின் கீழேயே உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நெருக்கடி நிறைந்த உலகளாவிய அமைப்புகளின் சிக்கலான முடிச்சால் நாம் அனைவரும் இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளோம். இது கோவிட்-19 இனால் உருவான சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளைக் கொண்டதொரு உலகம் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், “முதலில் வந்தவரும் அழைக்கப்பட்டவரும் என்றால் அது பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகமே தவிர வேறு யாரும் இல்லை. அவர் இலங்கையின் மிகச் சிறந்த நண்பர், ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் மிகச் சிறந்த நண்பர் என்பதுடன் அவர் எமது சிந்தனையை பிரதிபலிப்பவர். அதுமட்டுமன்றி பொதுநலவாயம் இங்கே இருப்பதற்கு இன்னமொரு காரணமும் உண்டு. சுதந்திரம் பெற்றுக்கொண்டதையடுத்து நாம் முதலில் பொதுநலவாயத்தில் இணைந்து கொண்டோம். ஐ.நாவுக்கான எமது நுழைவு தடுக்கப்பட்டது. 1955 இலேயே நாம் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் ஆனோம். எனினும் ஆரம்பம் முதலே நாம் பொதுநலவாயத்துடன் இருக்கின்றோம். எனவே அந்த வகையில் பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் எமது 75ஆவது சுதந்திர தினத்தின் போது இங்கு இருப்பதே சரியாக இருக்கும். நாம் சுதந்திரம் பெறும்போதும் நீங்கள் இருந்தீர்கள் இப்போதும் இங்கே இருக்கின்றீர்கள். எனவே, எமது சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்குமாறு அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பின்பேரிலேயே அவர் இங்கே வருகை தந்துள்ளார்.” என்றும் தெரிவித்தார்.

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, அமைச்சர் நசீர் அஹமட், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க,வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *