(அந்துவன்)

பண்டாவளை – பூனாகலை கபரகல தோட்டத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், எழுவர் காயமடைந்துள்ளனர். தெய்வாதீனமாக எவருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

பண்டாரவளை பகுதியில் (19.03.2023) நேற்று மாலை முதல் அடை மழை பெய்துள்ளது. இந்நிலையில் கபரகலை தோட்ட வைத்தியசாலை அமைந்துள்ள பகுதியிலேயே மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் இரண்டு லயன் குடியிருப்பு தொகுதிகள் அமைந்துள்ளன.

30 முதல் 40 வரையான வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட கிளை தெரிவித்துள்ளது.

காயமடைந்த எழுவரில் இருவர் கொஸ்லந்த வைத்தியசாலையிலும், இருவர் தியதலாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மண்சரிவால்  பாதிக்கப்பட்டுள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த  220 இற்கும் மேற்பட்டோர்  பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இன்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *