” உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தனிப்பட்ட ரீதியில் மாற்றுக்கட்சிகளை விமர்சிக்காமல், வேலைத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அட்டனில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசு பலவழிகளிலும் முயற்சித்து வருகின்றது.  தோல்வி பயத்தாலேயே யானை – மொட்டு கூட்டணி இவ்வாறு இழுத்தடிப்பு செய்ய பார்க்கின்றது. ஆனாலும் தேர்தலை ஒத்திவைக்க முடியும் என நான் நம்பவில்லை.

தோல்வி பயத்தால் தேர்தலை பிற்போட முயற்சிக்கின்றது. ஆனால் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என நம்புகின்றோம்.

இந்த தேர்தலில் எமக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. களநிலைவரம் மாறியுள்ளது. தேர்தலில் மாற்றுக் கட்சிகளை விமர்சிக்காமல், வேலைத்திட்டங்களை முன்வைத்து – தெளிவுபடுத்தி பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

அதேவேளை, 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்கு நாம் ஆதரவு. அதேபோல பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். நான் அமைச்சரவையில் இருந்தபோதும் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தினேன். ” – என்றார்.

 

(அந்துவன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *