இரத்தினபுரி வெள்ளந்துர தோட்டத் தொழிலாளர் குடியிருப்பொன்று தாக்குதலுக்கு உள்ளான சம்பவமானது தோட்டக் கம்பனிகளின் மிலேச்சத்தனத்தை வெளிப்படுத்துகிறது என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இரத்தினபுரி மாவட்டத்தில் காவத்தைப் பெருந்தோட்டக் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் வெள்ளந்துர தோட்டத்தில் குடியிப்பாளர் ஒருவரின் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுவொரு மிலேச்சத்தனமானது. இது பெருந்தோட்ட கம்பனிகளின் சர்வாதிகார போக்கினையும், அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தையும் காட்டுகிறது.
இது போன்றதொரு சம்பவம் மாத்தளை ரத்வத்த தோட்டத்தில் நடந்து ஒரு மாதம் கூடமுழுமையாகாத நிலையில் இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெற்றிருப்பது அரச கட்டுபாட்டுக்குள் பெருந்தோட்ட கம்பனிகள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
200 வருடங்கள் அல்ல 300 வருடங்களானாலும் பெருந்தோட்ட கம்பனிகளின் நடத்தைகளில் மாற்றம் ஏற்பட போவதில்லை. அவர்களின் கடும்போக்கும் மாறப்போவதுமில்லை.
அரசாங்கமும் இவாறான சம்பவங்கள் இடம்பெறும்போது வேடிக்கையாளர்களாக இருக்கின்றதே தவிர உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை. மாத்தளை ரத்வத்தை சம்பவத்திற்கு சரியான சட்ட நடவடிக்கை எசுத்திருந்தால் இன்று இவ்வாறு இடம்பெற்றிருக்காது.
தொடந்தும் அரசாங்கம் வேடிக்கை பார்க்காது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.