சென்னை அண்ணா சாலையில் இன்று காலை 10 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டது.
அண்ணாசாலை அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் உள்ள யூனியன் வங்கி மற்றும் 2 கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
இதன் காரணமாக, அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
இதேபோல், அண்ணாநகரிலும் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால், ஊழியர்கள் வெளியேறினர்.
மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், நில அதிர்வு ஏற்படும் வகையில் அங்கே பணி நடைபெறவில்லை என மெட்ரோ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் ண்டல தலைவர் பாலச்சந்திரன்,” சென்னையில் நில அதிர்வு ஏதேனும் பதிவாகி உள்ளதாக என டெல்லியில் உள்ள தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையத்தில் கேட்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை அத்தகைய தகவல்கள் எதுவும் அந்த மையத்தில் இருந்து கிடைக்கப்பெறவில்லை” எனவும் கூறினார்.
இந்நிலையில், சென்னையில் நில அதர்வு எதுவும் ஏற்படவில்லை என்று நில அதிர்வுகளை ஆராயும் மத்திய அரசின் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மிக குறுகிய இடத்திற்கு மட்டும் நில அதிர்வு உணரப்படாது, அப்படியிருந்தால் அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என நில அதிர்வுகளை ஆராயும் மத்திய அரசின் தேசிய மையம் தெரிவித்துள்ளது.