சென்னையில் நடைபெறும் ஜி 20 மாநாடு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு விருந்தினர்கள், பிரதிநிதிகள் இன்று (புதன்கிழமை) மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, கண்டுகளிக்க வருகை தருகின்றனர்.
நேற்று மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும், மோப்ப நாய்கள் மூலமும் கற்சிற்பங்கள் உள்ள பகுதிகளில் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர்.
அதேபோல் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வெளிநாட்டு விருந்தினர்களுக்காக நடத்தப்பட உள்ள கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் கடற்கரை கோவில் வளாகத்தில் உள்ள அரங்கம் முழுவதும் ஆய்வு செய்து சோதனை செய்தனர்.
அதேபோல் கடற்கரை கோவில் வளாகத்தில் உள்ள பூந்தொட்டிகள், புல்வெளிகள் உள்ளிட்டவைகளை வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவி மூலம் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சோதனைகளை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பார்வையிட்டார். கடற்கரை கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் அரங்கு, சிற்ப கண்காட்சி கூடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் பார்வையிட்டார்.