பதுளையில் இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகளுக்காக வலயக்கல்வி செயலாளரின் ஆலோசனைக்கமைவாக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மாகாண கல்வி அலுவலக அதிகாரியொருவர், மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தின் இரு அதிகாரிகள் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.
கள விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விபத்து இடம்பெற்ற பதுளை விளையாட்டு மைதானத்திற்கு பதுளை நீதவான் நொஜின் டி சில்வா சென்றிருந்ததாக ஊவா மாகாண கல்விச் செயலாளர் நந்தசேன ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மாகாணத்தின் ஏனைய பாடசாலைகளில் வருடாந்த கிரிக்கெட் போட்டிகளின் போது இத்தகைய நிகழ்வுகளை நிறுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை தர்மதூத கல்லூரி மற்றும் ஊவா கல்லூரிக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டிக்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனப் பேரணியின் போது, கெப் ரக வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் பதுளை தர்மதூத கல்லூரியின் இரு மாணவர்கள் உயிரிழந்ததுடன் மேலும் 06 மாணவர்கள் காயமடைந்தனர்.