முன்பு வழமையாக நடைபெற்றுக் கொண்டிருந்த கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவை தற்பொழுது இடை நிறுத்தப்பட்டுள்ளபோதும் இம்மாதம் ஆவணி மாதம் மருதமடு பெருவிழாவுக்காக விஷேட புகையிரத போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து காலை 6.40 க்கு புறப்படும் புகையிரதம் அனுராதபுரத்துக்கு வருகைதந்து பின் மடு பெருவிழாவை முன்னிட்டு அங்கிருந்து இதன் தொடர் சேவை மடு வீதிக்கு மதியம் 12.20 க்கு வந்தடையும். பின் 12.50 க்கு இப்புகையிரதம் மீண்டும் திரும்பும். இச்சேவையானது எதிர்வரும் 12 ந் திகதி தொடக்கம் 15 ந் திகதி வரை நடைபெறும் என ரயில்வே திணைக்களத்தால் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நீர்கொழும்பிலிருந்து மக்கள் மடு விழாவுக்காக வருவதற்கு விஷேட புகையிரத சேவையை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டதிற்கு இணங்க இவர்களுக்காக விஷேட புகையிரத சேவையும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புகையிரத அதிகாரியினால் எமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மடு ஆலயத்துக்கு உள்ளுர் சேவையானது இலங்கைப் போக்குவரத்து சபை 35 பஸ் வண்டிகளையும் தனியார் போக்குவரத்து 40 பஸ் வண்டிகளையும் சேவையில் ஈடுபடுத்த இருக்கின்றன.
புhதுகாப்பு படையினரின் புள்ளி விபரத்தின்படி கடந்த ஆடி மாத மடு அன்னையின் பெரு விழாவில் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதுடன் இம்முறை ஆவணி மாத இப்பெருவிழாவுக்கு ஏழு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ஆய்த்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.
(வாஸ் கூஞ்ஞ)