( நூரளை பி. எஸ்.மணியம்)
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் கிராமத்தில் உள்ள விவசாய காணியில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் தனது விவசாய காணியில் பாதுகாப்புக்காக அனுமதியின்றி பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் நிகழ்ந்துள்ளது. நுவரெலியா சாந்திபுர கிரமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் மைக்கல் ஹெக்குலஸ் டி சில்வா (வயது 66) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பயிர்களைப் பாதுகாப்பதற்காக குறித்த நபர் தனது வீட்டில் இருந்து விவசாய நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில் மின்சார கம்பிகளை இழுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா நீதவான் நேற்று (03) சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.