(பாறுக் ஷிஹான்)
யானைத்தாக்குதலுக்குள்ளாகி பலியாகிய குடும்பப் பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு, வம்பியடிப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (03) இரவு காட்டு யானை தாக்குதலில் கல்முனையிலிருந்து நிந்தவூர் அல்லிமூலை வழியாக இறக்காமம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் இரவு வேளை பயணம் செய்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்தவர் இறக்காமம் பகுதி 9ம் பிரிவைச்சேர்ந்த 43 வயதுடைய புஹாரி சரீப் சிபானி என்ற 3 பிள்ளைகளின் தாயார் என்பதுடன், அண்மையில் தொழில்வாய்ப்பிற்காக வெளிநாடு செல்லவிருந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த நிலையில், எடுத்துச் செல்லப்பட்ட சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.கருணாகரனின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொலிஸாரின் பிரசன்னத்துடன் மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.