இலங்கையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா உதவ வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைவர் பாரத் லால் தலைமையிலான இந்திய தூதுக்குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.

இந்த குழுவினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக பாரத் லால் அறிக்கையொன்றை விடுத்துள்ளதாக The Hindu தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, இலங்கை தொடர்பான தனது தொலைநோக்குப் பார்வை குறித்தும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வது  குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய தூதுக்குழுவிடம் தௌிவுபடுத்தியுள்ளார்.

கொள்கை சீர்த்திருத்தங்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு, திறன் வளர்ப்பு, நல்லாட்சி, துறைசார் வல்லுநர்களை உருவாக்குவதற்கான அமைப்புகளை ஏற்படுத்துதல், பொதுமக்களுக்கு திட்டமிட்ட கால வரையறைக்குள் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை மையப்படுத்தி ஜனாதிபதியின் கருத்துகள் அமைந்திருந்ததாக இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரங்களில் இந்தியா, இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும்,  பொதுக் கொள்கைக்காக இலங்கையில் பல்கலைக்கழகம் அமைக்க உதவ வேண்டும் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்ததாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *