நேற்று பாராளுமன்றத்தில் நாம் கொண்டு வந்த மலையகம்-200 முழுநாள் விவாதத்தில் கலந்துக்கொண்ட எதிர்தரப்பு, ஆளுந்தரப்பு எம்பிக்கள் அனைவரும் மலையக மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என மிக உறுதியாக கருத்து தெரிவித்துள்ளனர். என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறுகிறார்.
இது தொடர்பாக அவரது முக நூல் பதிவில்
இது ஒரு மிக சாதகமான சூழலையும், புதிய பல எதிர்பார்ப்புகளையும் உருவாகியுள்ளது.
ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பரந்துப்பட்ட நிகழ்ச்சி நிரல் கொண்ட பின்வரும் கலந்துரையாடலை நடத்தவே நாம் விரும்புகிறோம்:
(1) மலையகத்தில் வீடு கட்டி வாழவும், வாழ்வாதார தொழிலுக்குமான காணி உரிமை
(2) பெருந்தோட்ட குடியிருப்புகளை அரச பொதுநிர்வாக கட்டமைப்புக்குள் கொண்டு வருவது
(3) இந்திய அரசு உறுதியளித்துள்ள இலங்கை ரூ. 300 கோடி நன்கொடை பயன்பாட்டு திட்டம்
(4) நிலவரம்பற்ற சமூக சபை என்ற மலையக மக்களுக்கான அதிகார பகிர்வு
(5) பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும், அரசுக்கும் இடையிலான நீண்டகால குத்தகை ஒப்பந்தம் மீளாய்வு
ஆகியவை பற்றி பேசவே கூட்டணி விரும்புகிறது. இதுபற்றி நாம் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிக்க உள்ளோம்.அந்த அதிகாரபூர்வ கலந்துரையாடலில், அனைத்து மலையக எம்பிக்கள், கட்சிகள் கலந்து கொள்வார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். என குறிப்பிட்டுள்ளார்.