செப்டம்பர் 4 2023 முதல் செப்டம்பர் 14 2023 வரை திருத்தபணிகள் நடைப்பெறும்

பாறுக் ஷிஹான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி புராதன நூதனசாலையின் நிலைமை தற்போது உரிய பராமரிப்பின்றி குப்பைகள் தேங்கிக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இப்பூர்வீக நூதனசாலைக்கு அன்றாடம் பெரும் எண்ணிக்கையிலான உள்ளூர், வெளியூர் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

இப்பிரமாண்டமான நூதனசாலை 90% முஸ்லீம் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவே அமைகிறதுடன், குறித்த நூதனசாலையைப் பார்வையிடுவதற்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மீக, அறிவியில், வர்த்தக, வணக்கவழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்றுச்சான்றுகள் இந்நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

பராக்கிரமபாகு மன்னரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்களின் உருவங்களும் பதிவாக வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், வியபாரா முறைகள், புராதன பள்ளிவாயல்கள், முதலாவது ‘வுளு’ செய்த இடம் உட்பட பல நூறு முஸ்லிம் கலாசாரம் தொடர்பான பூர்வீக அடையாளங்களும் இங்கு காணப்படுகின்றன.

பல பழைமையான பொருட்களினையும் சில செயற்கையாக உருவாக்கப்பட்ட மாதிரி உருவமைப்புகளையும் காணக்கூடிய இந்நூதனசாலையின் அறிவித்தல் பலகைகள் சேதமடைந்து காணப்படுவதுடன், பார்வையாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்ற எந்தவொரு வழிகாட்டலுமின்றி தாந்தோன்றித் தனமாக செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

சில காட்சியறைகளில் ஒட்டடைகள் காணப்படுவதுடன், சில பொருட்கள் பகுதியளவில் சேதமடைந்திருக்கின்றன.

அதிகளவான குப்பைகள் சிதறிக் காணப்படவதுடன், இங்கு வருகை தருகின்ற பார்வையாளர்களைக் கட்டுப்படுத்தி வழிகாட்டல்களை மேற்கொள்வதற்கு உத்தியோகத்தர்கள் குறைவாகவுள்ளனர்.

இதனால் சிலர் செல்பி எடுப்பதற்காக அரிதான பொருட்களை தொடுகை மூலம் சேதப்படுத்த முயற்சிக்கின்றனர்.

தற்போது காத்தான்குடி நகர சபையின் பராமரிப்பிலுள்ள மேற்படி நூதன சாலையை சில தினங்களுக்கு மூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 04.09.2023 தொடக்கம் 14.09.2023 வரை 10 நாட்களுக்கு திருத்த வேலைக்காக நூதனசாலை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றைக்கூறும் வகையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் கலாசார மரபுரிமைகள் அமைச்சின அனுசரணையுடன் தொல்பொருள் ஆராய்சித் திணைக்கள வழிகாட்டலில் பல மில்லியன் ரூபா செலவில் 4 மாடிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பூர்வீக நூதனசாலை கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்கதக்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *