( நூரளை பி.எஸ். சுப்பிரமணியம்)
நுவரெலயா மாவட்டத்திலுள்ள
கொத்மலை வேத்தலாவ எனும் கிராமத்தில் நிலத்தின் கீழ் இருந்து நீர் செல்வது போலும் பல்வேறு விதமான அமானுஷ்யமான சத்தங்கள் கேட்பதாக கிராம மக்கள் அளித்துள்ள தகவலுக்கு அமைய நேற்று ( 15) ஞாயிற்றுக்கிழமை முதல் அக்கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்களை இரவு நேரத்தில் மட்டும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
![](https://annachinews.com/wp-content/uploads/2023/10/IMG-20231016-WA0001-300x256.jpg)
என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார். அவர் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், கொத்மலை வேத்தலாவ கிராமத்தில் வாழும் மக்கள் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த கிராமமானது மலைகள் அற்ற ஒரு சமவெளிப் பகுதியில்கொத்மலை நீர்தேக்கத்திற்கு அருகிலும் அமைந்துள்ளதாகவும் தெரிவித்த நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, அங்கு வழமையாக நிலத்துக்கு கீழ் இருந்து பல்வேறு சத்தங்கள் கேட்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாகவும், அதன் அடிப்படை யிலேயே நேற்று முன் தினம் முதல் அவர்களை பாதுகாப்பான இடங்களில் இரவு வேளையில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட தாகவும் தெரிவித்தார்.
இந்நிலைமையானது அச்சப்படுவதற்கான காரணியாக இதுவரை அடையாளம் எதுவும் காணப்படவில்லை. எனவும், எனினும் நுவரெலியா மாவட்ட கட்டிடம் மற்றும் நிலம் ஆய்வு மைய அதிகாரிகளின் உதவியோடு குறித்த கிராமம் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்க நடவடிக்க எடுக்கப்படவுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட மேலும் தெரிவித்தார்.