பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட யுவதியின் மரணமடைந்த சம்பவம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

21 வயதான சமோதி சங்தீபனி கடந்த திங்கட்கிழமை வயிற்றுப்போக்கு காரணமாக கெட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அன்றைய தினம் இரவு அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று முன்தினம் காலை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

2 ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளதனை தொடர்ந்து கை கால்கள் நீல நிறமாக மாறி, கீழே வீழ்ந்ததாக சமோதி சங்தீபனியின் தாயார் தெரிவித்தார். கண்கள், வாய் எரிவதாக கூறிய சமோதி எழுந்து நீர் இடத்திற்கு சென்றுள்ளார்.

தனக்கே ஏதோ நடக்கப்போவதாக அவர் தாயிடம் கூறிய நிலையில் கீழே விழுந்துள்ளார். உடனடியாக வந்த தாதி அவரை மருத்துவமனை படுகைக்கு கொண்டு சென்றவுடன் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் ஊசியில் பிரச்சினை இருப்பதாக சங்தீபனியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பலாம் என கூறப்பட்டதன் பின்னர் 2 ஊசிகள் ஏற்றப்பட்டதன் பின்னணி தொடர்பில் குழப்பமாக இருப்பதாக யுவதியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

இறுதியான தங்கையின் உடலை பார்க்கும் போது வயிற்று பகுதி வீக்கம் ஏற்பட்டிருந்தது. அவருக்கு எவ்வித உடல் உபாதைகளும் காணப்படவில்லை. ஊசியிலேயே மர்மம் உள்ளதென குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *