(க.கிஷாந்தன்)

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 என்ற சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் (09) காலை உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் மல்லியப்பு பகுதியில் பதுளை நோக்கி சென்றுக் கொண்டிருந்த குறித்த புகையிரதத்தில் பாய்ந்து இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் டயகம பிரதேசத்தை சேர்ந்த கணபதி அனுஷா தர்ஷனி என்ற 28 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த யுவதி அட்டன் நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும், குறித்த யுவதி அட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் ஐந்து வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் அட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

 

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட யுவதியின் சடலம் காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கேயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *