களுபோவிட்டியான தேயிலை தொழிற்சாலை நிறுவனமானது கடந்த 2022 இல் 2 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெற்று இருக்கிறது.
இதில் வரி போக நிகர இலாபமாக 214 மில்லியன் ரூபாயை தனதாக்கி கொண்டுள்ளது.
நீண்ட நாட்களின் பின்னர் இப்படியொரு நிறுவனத்தை சந்திக்கக் கிடைத்துள்ளது – கோப் குழுவின் தலைவர்தெரிவத்துள்ளதுடன் கோப் குழு பாரட்டியும் இருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.09.08ஆம் திகதி கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை நிறுவனம் (களுபோவிட்டியான ரீ ஃபக்டரி லிமிடட்) அழைக்கப்பட்டிருந்தது.
இதில் குறித்த நிறுவனத்தின் செயலாற்றுகை தொடர்பில் தலைவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
குறித்த நிறுவனம் தொடர்பான 2021, 2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை இங்கு ஆராயப்பட்டன.
இதற்குப் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி, களுபோவிட்டியான தேயிலை தொழிற்சாலை நிறுவனத்தின் தலைவர் அமிந்த ரொட்ரிகோ உள்ளிட்ட அதிகாரிகள் பலர் அழைக்கப்பட்டிருந்தனர்.
2022 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் அதிகூடிய வருமானம் 2 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டதுடன், வரிகள் செலுத்தப்பட்ட பின்னர் 214 மில்லியன் ரூபா இலாபமும் பதிவாகியுள்ளதாக களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மாத்தறை, காலி மற்றும் கண்டி மாவட்டங்களில் 4 தேயிலை தொழிற்சாலைகள் உள்ளதாகவும், தேயிலைக் கொழுந்துகளைப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட சகல சவால்களையும் வெற்றிகரமாகச் சமாளித்திருப்பதாகவும் தெரிவித்தார்
. அரசாங்க நிறுவனம் என்ற வகையில் தற்போதுள்ள அரசாங்கத்தின் விதிமுறைகளை கடைப்பிடித்து வெற்றியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் நிறுவனத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
நிறுவனம் சிறியதாக இருந்தாலும், இந்த அரசுக்கு சொந்தமான நிறுவனம் கணக்குகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகள் அடிப்படையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார். அந்த நிறுவனத்தைப் பாராட்டிய அவர், இதுபோன்ற முற்போக்கான நிறுவனத்தை சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
2013 ஆம் ஆண்டு கோப் குழுவினால் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளில் தொண்ணூற்றைந்து வீதமானவை பின்பற்றப்பட்டு உயர் முகாமைத்துவத் திறன்களில் பெரும் முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். இங்கே, இரண்டு கணக்காய்வு விடயங்கள் பற்றியே கவனம் செலுத்தப்பட்டிருந்தன.
நிறுவனத்தின் தலைமையகத்தை நடத்திவந்த கட்டடத்தை மாத வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ள செலுத்தப்பட்ட வைப்புத் தொகையைான 1.4 மில்லியன் ரூபாவை மீளப்பெற்றுக் கொள்வது தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், 2003ஆம் ஆண்டு 22 வீத வட்டி அடிப்படையில் அரசாங்க நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்ட கடன்தொகை அறவிடப்பட்டிருப்பதுடன், வட்டியை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கமைய குறித்த கடனைப் பெற்றுக் கொண்ட நிறுவனம் தவணைக் கட்டணமாக 51 மில்யலின் ரூபா தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்சா, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் எம்.ராமேஷ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். என பாரளுமன்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#இலாபத்தை பாரட்டிய கோப் குழு தொழிலாளர்களுக்கு இலாபத்தில் சம்பளத்த கூட்டி கொடுங்க என்று சொல்லி இருக்கலாமே