பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனமையினால், மின்சார உற்பத்திக்கு கூடுதல் செலவு ஏற்பட்டதாக அதன் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த வருடம் 4500 கிகாவாட் நீர் மின் திறன் எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், 3750 கிகாவாட் நீர் மின் திறனையே இவ்வாண்டு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்ததாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா கூறினார்.

இதற்கமைய, அனல் மின் நிலையங்களில் இருந்து 750 கிகாவாட் நீர் மின் திறனை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும், அதற்காக அதிக நிதியை செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலைமைய கருத்தில் கொண்டு மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் கூடுதல் தொகையை ஈடு செய்யும் வகையில், இந்த கோரிக்கை நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்டதாக கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பான விரிவான தகவல்கள் எதிர்வரும் திங்கட்கிழமை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுளா பெர்னாண்டோவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

இலங்கை மின்சார சபையின் இந்த கோரிக்கை தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *