முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(03) இரண்டாவது நாளாக தொடர்கிறது.
நீதித் துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைக்களும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(03) இரண்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இருந்து பேரணியாக முல்லைத்தீவு நகர சுற்றுவட்டம் வரைசென்று மீண்டும் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டடம் முன்பாக வந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னாரில்
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவண்ராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு கிழக்கு மாகாண சட்டத்தரனிகள் திங்கள் கிழமைத் (03) தொடக்கம் கால வரையறையற்ற தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவதை தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னாரிலும் சட்டத்தரனிகள் தங்கள் பணியை புறக்கணித்துள்ளனர்.
அத்துடன் மன்னார் சட்டத்தரனிகள் பலர் முல்லைத்தீவில் மாவட்ட நீதிமன்றின் முன்பாக திங்கள் கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
மன்னார் நீதிமன்றங்களில் திங்கள் கிழமை நடைபெற்ற வழக்குகளில் சட்டத்தரனிகள் முன்னிலையாகாமையால் வழக்குகள் யாவும் பிறிதொறு திகதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
(வாஸ் கூஞ்ஞ)