பாலஸ்தீனியர்களின் வாகனத்தொடரணி மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பெண்கள் சிறுவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் நேற்று மாலை தென்காசாவை நோக்கி இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது இடம்பெற்றுள்ளது. தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் பெரும் அழிவு இடம்பெற்றுள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
வடகாசாவிலிருந்து தென்காசாவை நோக்கி செல்லும் சலா அன் டின் வீதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து பெருமளவு மக்கள் இடம்பெயரத்தொடங்கியாதால் அந்த பகுதியில் பெருமளவு சனநெரிசல் காணப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வெளியாகியுள்ள வீடியோக்களில் 12 உடல்களை அடையாளம் காணமுடிகின்றது என தெரிவித்துள்ள பிபிசி, அதில் சில இரண்டு முதல் ஐந்து வயதுடையவர்களினது போல தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை இஸ்ரேலின் இந்த தாக்குதலில் 70 பேர் கொல்லப்ட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.