மலையக பெருந்தோட்ட மக்களுக்கு தனிவீடுகளை அமைத்துகொடுத்து லயன் யுகத்துக்கு முடிவு கட்டும் வேலைத்திட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்து வருகின்றது. இது தொடர்பில் உலக நாடுகளுடனும், அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது – என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

அத்துடன், காங்கிரஸை விமர்சித்தால் தான் சிலரால் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும். கண்டியில் உள்ள ஒருவரும் இதே அரசியலைதான் செய்து வருகின்றார். அப்படியானவர்களுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் கூறினார்.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் காரியாலயத்தில் 23.05.2023 இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையகத்தில் தனிவீட்டு திட்டம் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகியுள்ளன. இதன்படி 600 வீடுகளை கட்டுவதற்கான பணி இடம்பெற்று வருகின்றது. அத்துடன், எமது அமைச்சு ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளுக்கு நிலங்களை விடுவித்துக்கொள்வதற்கான நடவடிக்கையும் இடம்பெறுகின்றது.

அதேபோல இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டமும் ஆரம்பிக்கப்படும். இதற்கான காணிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சு நடத்தப்படுகின்றது. முதற்கட்டமாக 3 ஆயிரத்து 250 வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் அடுத்தகட்ட திட்டம் ஆரம்பமாகும்.

மலையகத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 4000 வீடுகளில் 141 வீடுகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளன. தற்போது ஒரு வீட்டுக்கு 28 லட்சம் ரூபா என்ற அடிப்படையில் அந்த வீடுகள் முழுமைப்படுத்தப்படும். ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கவில்லை. இதனால் ஜீவன் தொண்டமான் அமைச்சராக பொறுப்பேற்ற கையோடு 600 மில்லியன் ஒதுக்கினார்.

மலையகத்தில் லயன் யுகத்துக்கு முடிவு கட்ட வேண்டுமெனில் 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள்வரை தேவை.

இலங்கை மற்றும் இந்திய அரசுகள் உதவுவதுபோல சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

வீடுகளை வழங்கும்போது நாம் கட்சி பேதம் பார்ப்பதில்லை. கடந்த காலங்களில் அவ்வாறு இடம்பெற்றுள்ளன. அதற்கு நாம் பொறுப்பல்ல. எமது அமைச்சரின் தலைமையின்கீழ் மலையக மக்களுக்கான சேவையை நாம் வழங்குவோம். எமக்கு கட்சி முக்கியம் அல்ல. மக்களே முக்கியம்.

அதேவேளை, பாரம்பரிய விவசாயம் அல்லாமல் மலையக பகுதிகளிலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டு தொழில் முனைவர்கள், தொழில் தருணர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.  ஆரம்பத்தில் மூன்று இடங்களில் முன்மாதிரி திட்டம் இடம்பெறும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சித்தால்தான் சிலரால் மலையகத்தில் அரசியல் செய்ய முடியும். கடந்த சில நாட்களாக வேறு விடயங்களில் தொங்கிகொண்டு இருந்தவர்கள் மீண்டும் தமது பணியை ஆரம்பித்துவிட்டனர்.

அவர்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை. மலையக மக்களுக்கு குடியுரிமையை வாங்கிகொடுத்தது காங்கிரஸ்தான்.

அந்த உரிமை இருப்பதால்தான் அரசியல் செய்து காங்கிரஸை விமர்சிக்க முடிகின்றது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ” என்றார்.

(க.கிஷாந்தன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *