(க.கிஷாந்தன்)

அரசியலில் ஓரங்கட்டப்பட்டு அநாதைகளாக்கப்பட்டுள்ள ஒரு சில கோமாளிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும், அதன் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானையும் விமர்சித்து அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரிவிற்கான பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கொட்டகலை பிரதேச சபை தவிசாளருமான ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தேசிய ஊடகங்களில் தமக்கு இடமில்லை, அதாவது ஊடகங்களில் செய்திகள் வெளியாகும் அளவுக்கு தாம் எதையும் செய்யவில்லை, இன்னும் வளரவில்லை என்பதால்தான், சமூகவலைத்தளங்களில் எமது அமைச்சரவை விமர்சித்து, அதன்மூலம் ‘பப்ளிசிட்டி’ தேடிக்கொள்கின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அவர்களே போலி முகநூல் கணக்குகளை திறந்து கம்பு சுத்திக்கொள்கின்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நீண்ட வரலாறு கொண்ட ஒரு கட்சி. அது சமூகத்துக்காக செய்த சேவைகள் மக்களுக்கு தெரியும். அதனை நாம் பட்டியலிட வேண்டியதில்லை. இந்த குள்ளநரிக்கூட்டம் இன்று அரசியல் செய்வதற்கான உரிமைகூட காங்கிரஸால் தான் கிடைத்தது என்பதை மறந்துவிடக்கூடாது.

எமது பொதுச்செயலாளர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர். அவர் மலையகத்தில் புதியதொரு அரசியலை எதிர்பார்க்கின்றார். சேறுபூசும் அரசியல் கலாசாரத்தை நிராகரிக்கின்றார். மக்களுக்கு சேவை செய்கின்றாரே தவிர, தெருநாய்களுக்கெல்லாம் பதில் சொல்வதற்கு அவருக்கு நேரம் இல்லை.  அவரை விமர்சித்தால்தான் உங்களின் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமென்றால் அதையும் பெருந்தன்மையுடன் ஏற்கும் அரசியல் பக்குவம் எமது அமைச்சரிடம் உள்ளது.

அமெரிக்க தூதுவரை சந்தித்து ஓரிரண்டு படங்களை எடுத்துக்கொண்டு அவற்றை வைத்து ஆயுள் முமுவதும் அரசியல் நடத்துவதற்கு எதிர்பார்க்கும் இந்த கோமாளிக்கூட்டம், தூதுவரின் விஜயம் குறித்தும் தவறான விம்பத்தை உருவாக்க முற்படுகின்றன.

எமது சமூகத்துக்காக அமெரிக்கா ஊடாக உதவிகளை எப்படி பெறுவது என்பது பற்றியே எமது அமைச்சர் சிந்தித்து வருகின்றார். மாறாக அறிக்கை விடுத்தும், படங்களை காட்டியும் அவர் பிழைப்பு நடத்தவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *