அமெரிக்காவில் நடைபெற்று வரும் கண்காட்சிக்குள் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா – டெக்சாஸ் மாகாணத்தின் முக்கிய நகரான டல்லாசில் அரசு சார்பில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கண்ணை கவரும் அலங்கார விளக்குகள், விதவிதமான உணவு பண்டங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளை ரசித்து களித்தப்படி பொதுமக்கள் உற்சாகமாக வலம் வந்தனர்.

இதன்போது, மர்மநபர் ஒருவர் கண்காட்சிக்குள் திடீரென புகுந்து அவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை கொண்டு சரமாரி தாக்குதலில் ஈடுபட்டார்.

இதனால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கூட்ட நெரிசல் காரணமாக பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

குறித்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மூன்று பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மர்மநபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *