தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றமை மிகுந்த கவலையளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே தமிழக முதலமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு கோடியக்கரை பகுதியில் கடந்த 5 ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் சிலரின் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் நான்கு மீனவர்களுக்கு கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்குள்ளான மீனவர்களுக்கு சொந்தமான ஏழு தொலைபேசிகளை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விடயத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் வசமுள்ள மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் மேற்கொள்ள வேண்டுமெனவும் தனது கடிதத்தின் மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *