தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 20 வருட காலமாக முயற்சித்து வருகின்ற போதிலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லையென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று புதன்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவரான வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் சமாசப் பிரதிநிதிகளினால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையிடலயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் தமிழக கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்தும், செயற்பாட்டை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போதிலும், அவர்களை கைது செய்யும் செயற்பாட்டில் கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர்.

கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த, கடந்த 20 வருட காலமாக தன்னால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனினும் குறித்த அத்துமீறலை கட்டுப்படுத்துவதற்காக பல பேச்சுவார்த்தைகளை கச்சதீவு பகுதியில் ஏற்பாடு செய்ததிருந்தாகவும், எனினும் நான் கலந்து கொண்டேன். ஆனால் எந்தவிதமான முடிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது ஒரு தீர்மானத்துக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதாவது, சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா சென்று இந்த விடயம் தொடர்பில் தமிழக தலைவர்களுடன் கலந்துரையாடி உண்மையான நிலைமையினை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் எனவும் அதற்கு சக தமிழ் உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, இன்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மணல் அகழ்வு, போதைப்பொருள் பரவல் உட்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல், வனவளப் பாதுகாகப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்தல் உட்பட்ட பல்வேறு விடயங்களும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு:- கடற்றொழில் அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *