மன்னாரில் நடைபெற இருக்கும் 39 வது தேசிய மீலாத்துன் நபி தின விழாவை முன்னிட்டு எவ்வாறு இவ்விழாவை நேர்த்தியான முறையில் நடத்துவது சம்பந்தமாக புத்தசாசன சமய விவரங்கள் மற்றும் கலாச்சார அலுவலர்கள் அமைச்சர் விதுர விக்ரம நாயக்க தலைமையில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் பங்கேற்போடு மன்னார் மாவட்ட செயலகத்தில் கடந்த மாதம் (ஓகஸ்ட்) நடைபெற்றதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (22.09.2023) மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வை.பரந்தாமன் அவர்களின் தலைமையில் இவ்விழா சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் பங்கேற்றத்துடன் இது தொடர்பான சகல திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
முசலி பிரதேச செயலகப் பிரிவில் சிலாவத்துறை முஸ்லீம் பாடசாலை மைதானத்தில் நடைபெற இருக்கும் இவ்விழாவை முன்னிட்டு சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்டவர்களும் மற்றும் ஜனாதிபதியும் கலந்துகொள்ள இருப்பதால் இதற்கான அத்தியாவசிய முன்னேற்பாடுகள் இக்கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டது.
(வாஸ் கூஞ்ஞ)