க.கிஷாந்தன்)
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து நள்ளிரவு 12 மணியளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 01.08.2023 அன்று அதிகாலை 4.40 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தின் போது, பஸ்ஸில் 120 பேர் வரை பயணித்துள்ளனர். எனினும் 18 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்
.பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே பஸ் கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 18 பேரும், வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பில் வட்டவளை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.