மீராவோடை வழியாக வாழைச்சேனை-அக்கரைப்பற்று செல்லும் பஸ் வண்டி மீது தாக்குதல் : நடத்துனருக்கு காயம்

வாழைச்சேனையிலிருந்து மீராவோடை வழியாக அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச்சபை வாழைச்சேனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ் வண்டி மீது மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் 18ம் கட்டைப்பகுதியில் அதிகாலை 5.10 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தண்ணீர் போத்தல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக பஸ் வண்டியின் கண்ணாடிகள் வெடித்துச்சிதறியுள்ளதுடன், நடத்துனரும் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இம்முறை கேடான தாக்குதலால் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கு அதிகாலை வேளையில் பயணம் செய்த பிரயாணிகள் பெரிதும் அசெளகரியத்தை எதிர்கொண்டனர்.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

குறிப்பாக, இப்பஸ் வண்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரை சென்று அக்கறைப்பற்றுக்குச் செல்வதன் காரணமாக வழமையாக தமது வைத்தியத்தேவைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச்செல்லும் கூடுதலான நோயாளிகளும் நோயாளிகளைப் பார்வையிடுவோரும் பல்கலைக்கழக மாணவர்கள், அரச, தனியார் அலுவலர்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்காகச் செல்வோரும் பயணிப்பது வழக்கமாகும்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *