75ஆவது தேசிய சுதந்திர தினத்தையொட்டி கொழும்பு 07 இல் அமைந்துள்ள கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் ஜே.டி.ஏ பெரோ அரங்கில் நடைபெற்று வரும், ‘ஆர்ட் ஒப் ஶ்ரீலங்கா’ எனும் சித்திரக் கண்காட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (09) பிற்பகல் பார்வையிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஆர்ட் ஒப் ஶ்ரீலங்கா’ சித்திரக் கண்காட்சியை இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பொஜ் ஹார்ன்பொல் (Poj Harnpol) கடந்த 04 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் நாடு முழுவதுமுள்ள புதிய மற்றும் திறமையான கலைஞர்களின் பங்களிப்புடன் இந்த சித்திரக் கண்காட்சி நடத்தப்படுகிறது. சிரேஷ்ட சித்திரக் கலைஞர் எச்.எஸ் சரத் இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

எதிர்பார்க்கப்பட்ட வகையில் நாடு முழுவதுமிருந்து பெரும் எண்ணிக்கையான இளைஞர்களும் பெரியோரும் தமது கலைப் படைப்புகளை இச்சித்திரக் கண்காட்சிக்காக அனுப்பி வைத்திருந்ததுடன் இவர்களுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் யுவதிகளும் உள்ளடங்குவதாக சிரேஷ்ட சித்திரக் கலைஞர் எச்.எஸ் சரத் தெரிவித்தார்.

கண்காட்சியை பார்வையிடுவதற்காக இங்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அங்கே கலந்து கொண்ட சித்திரக் கலைஞர்களிடம் தகவல்களை கேட்டறிந்து கொள்வதற்கும் மறக்கவில்லை.

மூன்று வருடங்களுக்கு ஒரு தடவையாயினும் இவ்வாறான சித்திரக் கண்காட்சியை ஏற்பாடு செய்யுமாறு இதன்போது கலைஞர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு ஜனாதிபதி, மூன்று வருடங்களுக்கு ஒரு தடவையல்ல சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்கும் வகையில் வருடந்தோறும் இவ்வாறான சித்திரக் கண்காட்சிகளை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர்களிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உருவப்படங்கள் உள்ளிட்ட பல படங்கள் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
‘ஆர்ட் ஒப் ஶ்ரீலங்கா’ சித்திரக் கண்காட்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *