75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அடையாள ரீதியிலாக கையளிக்கப்பட்டன.

இதற்கான ஆவணங்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, ஜனாதிபதியிடம் கையளித்தார்.

நாடாக்களை வெட்டி இரண்டு பேருந்துகளை திறந்து வைத்த ஜனாதிபதி, இந்தியா கையளித்த பேருந்துகளைப் பார்வையிட்டார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்திய அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்ததாக, இந்தப் பேருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன் முதல் தொகுதியாக 75 பேருந்துகள் அண்மையில் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 40 பேருந்துகளின் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதன்படி, இலங்கைக்கு இதுவரை 165 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 500 பேருந்துகள் வழங்கும் திட்டம் 2023 மார்ச் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

கிராமிய மக்களின் போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் பேருந்துகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து டிப்போக்கள் ஊடாகவும் பயன்பாட்டுக்கு விடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர்களான ராதிகா விக்ரமசிங்க, முதிதா பிரஷாந்தி மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைவர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *