ஆண்டுக்கு இத்தனை ஆயிரம் புலம்பெயர்ந்தோரை வரவேற்கிறோம், இத்தனை சர்வதேச மாணவர்களை வரவேற்கிறோம் என ஒருபக்கம் பெருமையடித்துக்கொள்கிறது கனடா.

அதை நம்பி பல்லாயிரக்கணக்கானோர் கனடாவுக்குச் செல்கிறார்கள். ஆனால், வரவேற்பதுடன் தனது வேலை முடிந்துவிடுகிறது என்பதுபோல இருக்கிறது கனடாவின் நடவடிக்கைகள்.

கனடாவில் இவ்வளவு சம்பளம் கிடைத்தால், நம் நாட்டுப் பணத்தில் இவ்வளவு வருகிறதே என்று கணக்குப்போட்டு ஆசையுடன் கனடாவுக்குச் சென்றால், அங்கு வீடு கிடைப்பதும் கஷ்டம், வீட்டு வாடகையும் எக்கச்சக்கம் என்பது தெரியவருகிறது.

வேலைக்குப் போன சிலர் ஏமாந்து போய் அமைதியாக நாடு திரும்பிவிட, படிக்கப்போகும் பிள்ளைகளுக்கு, அதுபோல படிப்பை பாதியில் விட்டுவிட்டு நாட்டுக்கு திரும்ப முடியாத ஒரு நிலை…

நேற்று வரை பள்ளியில் படித்துவிட்டு, கல்லூரிக் கனவுகளுடன் கனடா கனவுகளும் சேர்ந்துகொள்ள கனடாவுக்கு வந்தால், இங்கே தங்க இடம் பிடிப்பதற்குள்ளேயே பிள்ளைகளுக்குப் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது.

சொந்த நாட்டில் தம்மை நம்பி ஒரு குடும்பம் இருப்பதை எண்ணி, நாட்டுக்கும் திரும்ப முடியாமல், கனடாவிலும் சரியான உதவிகள் கிடைக்காமலும் திணறிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு கூட்டம் சர்வதேச மாணவர்கள்.

இந்தியாவிலிருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வந்தார் கேஷவ் (Keshav Malhotra, 20). வந்த நாள் முதல் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார் அவர்.

இதுவரை 17,000 அடிகள் நடந்துவிட்டேன், இதுவரை தங்குவதற்கு ஒரு நல்ல இடம் கிடைக்கவில்லை என்கிறார் கேஷவ். நிறைய விளம்பரங்கள் வருகின்றன.

ஆனால், வீட்டைப் போய் பார்த்தால் விளம்பரத்தில் காட்டப்பட்டதற்கும் அந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதேபோல, ஒரு குளியலறை கொண்ட ஒரு குடியிருப்பில் எட்டுபேர் வரை தங்கினாலும், அதற்கும் எக்கச்சக்க வாடகை கேட்கப்படுகிறது என்கிறார் அவர்.

ஏற்கனவே, கனடா கல்லூரிகள் பல சர்வதேச மாணவர்களின் கல்விக்கட்டணத்தை நம்பித்தான் இயங்குவதாகக் கூறப்படுகிறது. இப்போது, வீட்டு உரிமையாளர்களும் இந்த மாணவர்களை நம்பி வருவாய் பார்க்க முடிவுசெய்துவிட்டார்கள் போலிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *