ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் (Peter Ramsauer) நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்தார்.

ஜேர்மன்-இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பீட்டர் ராம்சோர் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

பீட்டர் ராம்சரை மிகவும் அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான கடந்த கால உறவுகளை நினைவு கூர்ந்து கலந்துரையாடலை ஆரம்பித்தார்.

ஜேர்மன் அரசாங்கத்தின் அனுசரணையுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இந்த சந்திப்பில் மீளாய்வு செய்யப்பட்டதுடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இலங்கையில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஜேர்மனியின் தொழில்நுட்ப உதவிகளையும் முதலீட்டையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் , இது தொடர்பில் தொடர்ந்தும் உதவிகளை வழங்குமாறு கோரியுள்ளார்.

அத்துடன், இந்நாட்டில் யானை-மனித மோதலை முகாமைத்துவம் செய்வதற்கு ஜேர்மனி அறிமுகப்படுத்தியுள்ள திட்டங்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்த அதேவேளை, அவற்றை நடைமுறைப்படுத்தியமைக்கு பீட்டர் ராம்சோர் மகிழ்ச்சி வெளியிட்டார்.

மேலும், ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரிகள் மூலம் இலங்கை மாணவர்களுக்கான பயிற்சித் திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆதரவை எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக் குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிலைபெறுதகு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் பணிப்பாளர் ரந்துல அபேவீர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *