நுவரெலியா, லபுக்கல பகுதியில் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (5) இடம்பெறுள்ளது.

இதன்போது லொறியில் பயணித்த 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா கம்பளை பிரதான வீதியில் நுவரெலியா, லபுக்கல தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது லொறியில் 15 பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் காயமடைந்த 14 பேர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் படுகாயமடைந்த 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 அத்தோடு லொறியில் பயணித்தவர்களில் ஒருவர், லொறி பள்ளத்தில் குடைசாயும் முன்பே லொறியில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்களை கொத்மலை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் லபுகெலே பிரதேசவாசிகள் இணைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  விபத்துக்குள்ளான லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்‍துடன் அதிவேகமாக சென்ற லொறியின் வேகத்தை சாரதி கட்டுப்படுத்த முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *