ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நியாயமானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கான வலுவான காரணத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பினூடாக போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளமை தௌிவாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா முன்னெடுத்துள்ள யுத்தத்தில் பல்வேறு போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் உக்ரைன் குழந்தைகள் கடத்தப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஐ.நா பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்தது.

இந்த விசாரணையின் அடிப்படையில், ஐ.நாவின் புலனாய்வு அமைப்பு கடந்த வியாழக்கிழமை அறிக்கையொன்றையும் வௌியிட்டது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ரஷ்யா, ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் மனிதாபிமான நோக்கத்திற்காக அவர்களை ரஷ்யாவிற்கு அழைத்துச்சென்றதாகக் கூறியுள்ளது.

ரஷ்ய-உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து உக்ரைனில் இருந்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சட்டவிரோதமாக ரஷ்யாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன

இதேவேளை, கருங்கடல் அருகே வானில் பறந்துகொண்டிருந்த அமெரிக்க கண்காணிப்பு ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய இரண்டு போர் விமானிகளுக்கு அரச விருதுகளை வழங்க ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *