மோடி பெயர் சர்ச்சை விவகாரத்தின் அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைதண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்தார்.

2019ம் ஆண்டு கர்நாடகாவில் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தில் அவர் இன்று மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் அவரது ஜாமீனை நீட்டித்துள்ள நீதிமன்றம் விசாரணையை ஏப்ரல் 13ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இன்று ராகுல்காந்தி தனது மேல்முறையீட்டு மனுவை தாக்க செய்ய சூரத் நீதிமன்றத்துக்கு நேரில் சென்றார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், இமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகிய மூன்று மாநிலங்களின் காங்கிரஸ் முதல்வர்களும் இருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுவுடன், நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இரண்டு விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளார். தண்டனைக்கு தடை கோரும் விண்ணப்பம் மற்றும் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் விண்ணப்பம் ஆகியவற்றை அவர் தாக்கல் செய்துள்ளார்.

தண்டனை மீதான தடை தொடர்பான அவரது விண்ணப்பம் ஏற்ற்க்கொள்ளப்பட்டால், ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை மீட்டெடுக்க முடியும். எனவே தண்டனைக்கு தடை கோரிய மனுவை முன்கூட்டியே விசாரிக்க ராகுல் காந்தியின் வழக்கறிஞர் குழு வலியுறுத்தியுள்ளது.

“விசாரணை நீதிமன்றத்தின் அப்பட்டமான தவறுகளை மேல்முறையீட்டு நீதிமன்றம் கருத்தில்கொண்டு, விரைவாக நீதி வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று ராகுல் காந்தியின் வழக்கறிஞர் குழுவை வழிநடத்தும் காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

முன்னதாக, நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததன் விளைவாக அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *