எஸ்.எம்.எம்.முர்ஷித்.
அனுராதபுரம் -மிகிந்தலை தம்மன்னாவ பிரதேசத்தில் கடந்த 11.08.2023 ஆந் திகதி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே மூன்று குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ள சோகச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பிரதேச வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தவர்களாவர்.
8, 12 வயதுடைய ஆண், 14 வயதுடைய பெண் பிள்ளையின் தந்தை தர்மசிரி ரணதுங்க (வயது 43), 22 வயதுடைய பெண் பிள்ளை, 14, 07 வயதுடைய ஆண் பிள்ளைகளின் தந்தை எஸ்.மஹிந்த குமார (வயது 45), 14 வயதுடைய ஆண், 18, 10 வயதுடைய பெண் பிள்ளைகளின் தந்தையான சரத் சந்திரசிரி தினநாயக்க (வயது 46) ஆகிய மூன்று குடும்பஸ்தர்களே இவ்வாறு பரிதாபமான முறையில் உயிரிழந்தவர்களாவர்.
இந்நிலையில், உயிரிழந்த மூவரினதும் குடும்பங்களின் உடனடித்தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தியாகி அறக்கொடை நிதியத்தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் ஐயா உதவி செய்துள்ளார்.
அதற்கமைய தியாகி அறக்கொடை நிதியத்தின் இணைப்பாளரும் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் மூலம் குறித்த குடும்பங்களின் நிலைமைகளை அறிந்து கொண்டதுடன், அப்பிரதேசங்களுக்கு நேரில் சென்று அக்குடும்பங்களின் தூக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு தியாகி ஐயா விடுத்த பணிபுரைக்கமையவும் அங்கு விஜயம் மேற்கொண்டதுடன், நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் வழங்குவதற்கு மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில், இம்மனிதாபிமான உதவியை வழங்கும் நேக்கில் தமது குழுவினருடன் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்த ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களின் அழைப்பில் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்து கொண்டு இதற்கான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியதுடன், அப்பிரதேச பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது, இக்குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் உதவித்தொகை கையளிக்கப்பட்டது.
இம்மனிதாபிமான உதவியினைப் பாராட்டிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், தியாகி ஐயாவின் சேவை இந்த நாட்டில் நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு சகலருக்கும் முன்னுதாரணமெனவும் குறிப்பிட்டார்.
குறித்த விஜயத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் குறிப்பிடுகையில்,
இவ்வாறு மின்னல், யானைத்தாக்குதல், விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தத்துக்குள்ளான ஏராளமான குடும்பங்களுக்கு இன, மத, மொழி வேறுபாடின்றி  நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தியாகி அறக்கொடை நிதியத்தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் கணக்கிட முடியாத கோடி ரூபாய்கள் உதவித்தொகைகளாக  வழங்கி வருவதுடன், கஷ்டங்கள், துன்பங்களைத் தீர்ப்பதற்கு அள்ளி வழங்கும் தாராள மனம் கொண்ட மிகப்பெரும் கொடை வள்ளலாகவும் திகழ்கின்றார் எனக்குறிப்பிட்டார்.
இதன் போது, தியாகி ஐயாவின் தாராள குணத்தை அக்கிராம மக்கள் வெகுவாகப்பாராட்டியுடன், அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.
தொடர்ந்தும் இவ்வாறான மனிதாபிமான உதவிகளை தாம் வழங்கத்தயாராகவிருப்பதாக தியாகி அறக்கொடை நிதியத்தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *