ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இதேபோல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு ‘பெண்கள் பிரிமீயர் லீக்’ என்று நேற்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் 5 அணிகள் பங்கேற்கும் என்றும் 10 நகரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் அந்த அணிகளை வாங்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் மூடிய டெண்டர் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஐ.பி.எல். பெண்கள் அணிக்கான விண்ணப்பத்தை ரூ.5 லட்சம் செலுத்தி 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாங்கின. இதில் 17 நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பித்து இருந்தன. இதில் 7 ஐ.பி.எல். அணி நிர்வாகங்களும் அடங்கும்.

பெண்கள் ஐ.பி.எல். (பெண்கள் பிரிமீயர் லீக்) 5 அணிகளுக்கான டெண்டர்கள் மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டன.

இதில் அதிக தொகையை குறிப்பிட்டு விதிமுறைக்கு உட்பட்டு விண்ணப்பித்து இருந்த நிறுவனங்களுக்கு அவர்கள் கேட்ட அணிகள் ஒதுக்கப்பட்டன. இதன்படி அதிகபட்சமாக ஆமதாபாத் அணியை ரூ.1,289 கோடிக்கு அதானி குழுமம் தங்கள் வசப்படுத்தியது.

கடந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட ஐ.பி.எல். ஆண்கள் அணியை வாங்க முயற்சித்து அதானி குழுமம் தோல்வியை தழுவியது நினைவிருக்கலாம். மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது.

இதேபோல் பெங்களூரு அணியை (ரூ.901 கோடி) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகமும், டெல்லி அணியை (ரூ.810 கோடி) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகமும் சொந்தமாக்கின.

லக்னோ அணியை ரூ.757 கோடிக்கு கேப்ரி குளோபல் நிறுவனம் தங்கள் வசமாக்கியது. 5 அணிகள் மொத்தம் ரூ,4,669.99 கோடிக்கு விற்பனை ஆனது. இது இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்த்ததை (ரூ.4 ஆயிரம் கோடி) விட அதிக தொகையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *