கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டு புகையிர பாதையில் பயணித்த யுவதி ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் குடாகம பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் மேகா என்ற இளம் பெண்ணே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி, ஹட்டன் கொட்டகலை நகருக்கு சென்று மீண்டும் புகையிரத பாதையில் கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டு வீடு திரும்பிய போது ஹட்டனுக்கும் கொட்டகலை புகையிரத நிலையங்களுக்குமிடையிலான 60 அடி பாலத்திற்கு அருகில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

புகையிரதத்தில் அடிபட்டு உயிரிழந்தவரின்  சடலம் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளால் கொட்டகலை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திம்புல பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *