டெங்கு ஒழிப்புக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து உள்ளூராட்சிமன்ற அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாண ஆளுநர்கள், உள்ளூராட்சிமன்ற ஆணையாளர்கள், பிரதேச சபை செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர கூறியுள்ளார்.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பொதுமக்களும் மும்முரமாக ஈடுபட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பஸ்தரிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் துப்புரவு பணிகளை விரைவுபடுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனுமொரு பகுதியில் சுற்றுச்சூழல் துப்புரவு செய்யப்படாதிருப்பின் அந்த பகுதிக்கு பொறுப்பான உள்ளூராட்சிமன்றங்களின் உயரதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறார்களின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 43 சிறுவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக அவர் கூறியுள்ளார்.

2 நாட்களுக்கு தொடர்ச்சியாக காய்ச்சல், வாந்தி மற்றும் உடல் சோர்வு இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடி தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என டொக்டர் ஜி.விஜேசூரிய அறிவுறுத்தியுள்ளார்.

6 மாவட்டங்களிலுள்ள 57 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதி அபாய நிலையில் இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 801 ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *