யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா
நாட்டில் டெங்கு நோயாளிகளின் தொகை அதிகரித்து வருவதாகதெரிவித்துள்ளார்.

வடக்கில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் நேற்றைய தினம் (28.01.2023) கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் இந்த வருடம் தை மாதம் கண்டறியப்பட்ட மொத்த டெங்கு நோயாளிகளின் தொகையானது 2021 ஆம் ஆண்டு இலங்கையில் ஆண்டு முழுவதும் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு சமனாக காணப்படுகின்றது.

அதேபோன்று யாழ்.போதனா வைத்தியசாலையிலும் 2023 ஆம் ஆண்டு தை மாதம் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 300 ஆக காணப்படுகின்றது.

இதில், 33 சத வீதமானவர்கள் சிறுவர்களாக காணப்படுகின்றார்கள்.

2022 ஆம் ஆண்டு தை மாதம் 200 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் கடந்த வருட தை மாதத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் 50 சத வீதம் அதிகமாக காணப்படுகின்றது.

எனவே, டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை செய்யாவிட்டால் இந்த வருடம் சுமார் 2,000 டெங்கு நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்ககூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.

அத்துடன், டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் முக்கியமாகும். குறிப்பாக டெங்கு நோய் அதிகம் பாதிப்பது சிறுவர்களையே எனவே சிறுவர்களுடைய பெற்றோர்கள் இதில் கவனம் எடுக்க வேண்டும்.

டெங்கு நோயானது சிறுவர்களை குறிப்பாக 15 வயதுக்குட்பட்டவர்களை மிகவும் கடுமையாக பாதிக்கின்றது.

அடுத்ததாக வயது முதிர்ந்தவர்களை பாதிக்கின்றதுடன், உடற்பருமன் உடையவர்கள் சலரோக நோயுடையவர்கள் அஸ்மா நோயுடையவர்களை பாதிக்கின்றது.

எனவே, டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு மிக முக்கியமாகும்.

அடுத்ததாக டெங்கு நுளம்பு மூலம் தொற்றுகின்றது. வீதிகளில் கழிவுகள் காணப்படுதல் மிக முக்கியமான பிரச்சினை. 90 சத வீதமான மக்கள் வீதிகளில் கழிவுகளை வீசும் போது அதில் நுளம்பு பெருகுவதனால் டெங்கு நுளம்பு அதிகம் பரவுகின்றது.

குறிப்பாக சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். கடந்த வருடம் சுமார் ஐந்து பேர் டெங்கு நோயினால் யாழ்ப்பாணத்தில் இறந்துள்ளார்கள்.

எனவே, இவ்வருடம் இவ்வாறான இறப்புகள் ஏற்படாது இருப்பதற்கு நமக்கு முதல் தேவை டெங்கு பெருகும் இடங்களை அகற்றுதல் வேண்டும் அதாவது சுத்தப்படுத்தல் வேண்டும்.

அண்மை காலங்களில் டெங்கு நோய் பெருகுமிடங்கள் சுற்றுச்சூழல் சுகாதாரம் மிக முக்கியமாகும். அவற்றினை டெங்கு விழிப்புணர்வு வாரம் மூலம் பொதுச்சுகாதார பரிசோதரர்கள் மூலம் செய்கின்றோம்.

புதிது புதிதாக கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன அவை அரைகுறையாக இருக்கும்போது அதில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான சாத்திய கூறுகள் உண்டு.

யாழ். நகருக்கு அப்பால் புதிய நகரங்கள் போல கடைகள் கட்டப்படுகின்றன தோட்ட காணிகளில் வீடுகள் மண்டபங்கள் கடைகள் கட்டும்போது அங்கு நுளம்பு பரவுவதற்குரிய சூழல் அதிகரித்து காணப்படுகின்றது.

எனவே, டெங்கு நோயிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள சுற்றுச்சூழலை சுத்தமாக பேணுவதனால் டெங்கு நுளம்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *